கொன்றைவேந்தன் - ஔவையார் - 1 - 10
கொன்றைவேந்தன்
ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயும் தந்தையும் கண் முன்னே இருக்கும் கடவுள்கள். கண்ணறியாக் கடவுள்களுக்கு முன்னதாக அவர்களை வணங்கு.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஆலயத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும், அது இருக்கும் இடத்தை நோக்கியாவது தினமும் ஒருமுறை கைகூப்பித் தொழுதுவிடு. அதுவும் கூட உனக்கு நற்பலன்களை அளிக்கும்.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
மக்கள் கூடி வாழ ஒரு இல்லத்திற்குச் சமமான வாழ்க்கை வேறில்லை. இல்லறத்தில் இருக்கும் நிறைவு வேறெதிலும் இல்லை.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈயாதார், பிறருக்குத் தன் செல்வத்தைப் பகிர்ந்து அளிக்காதவர், செல்வத்தைக் கள்வர் கவர்ந்து செல்வர். அளிக்காத காசு பலிக்காது.
உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகு
பெண்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக் காக்க வேண்டும். உடல் வனப்பைப் பேணும் பெண் என்றும் அழகி எனப் போற்றப்படுவாள்.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
சமூகத்திற்கு ஒவ்வாத எந்தச் செயலும் முற்றிலும் அழிவைத் தரும். ஊரோடு ஒத்து வாழ் என்பதன் எதிர்ப்பத வாக்கு.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
பார்வை உடையோருக்கு உலகைப் புரிந்து கொள்ள உதவுவது எண்ணும், எழுத்துமாகும். கண்ணென்று உள்ளோர் கற்றோராய் இருக்க வேண்டும்.
ஏவா மக்கண் மூவா மருந்து
குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்களைப் பெற்றவர்கள் அமுத பானத்தை அருந்திய தேவர்கள் போல அதிர்ஷ்டம் செய்தவர்கள்.
ஐயம் புகினும் செய்வனச் செய்
ஒரு காரியத்தைச் செய்ய ஒப்புக் கொண்ட பின்னர் அது குறித்து ஐயம் ஏற்பட்டாலும் இடைநிறுத்தாதே. எடுத்த காரியம் முழுதும் முடி.
ஒருவனைப் பற்றி ஓர் அகத்திரு
உனக்குக் குருவென அல்லது தெய்வமென ஒருவரை இறுகப் பற்றிக் கொள். குரு உருவே திரு உரு.