வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 75 - 81
75. பழியா வருவது மொழியாது ஒழிவது தீமை பயக்கும் சொற்களைப் பேசாமல் தவிர்த்தல் நலம். 76. சுழியா வருபுனல் இழியாது ஒழிவது சுழித்து வரும் நீரோட்டத்தில் இறங்காமல் இருப்பது நலம். 77. துணையோடு அல்லது நெடுவழி போகேல் தொலைவான இடத்திற்குத் துணையின்றிப் போகாதே. 78. புணைமீது அல்லது நெடும்புனல் ஏகேல் படகு மீது ஏறாமல் பெரிய நீர்நிலையைக் கடக்க முயலாதே. 79. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே உன்னால் இயலாத காரியத்தைக் கன்னியர் மேல் கொண்ட காதல் பெருக்கில் செய்ய முயலாதே. 80. வழியே ஏகுக வழியே மீளுக நேர்வழி சென்று அவ்வழியிலேயே திரும்பு. 81. இவைகா ணுலகிற்கு இயலா மாறே மேற்குறிப்பிட்ட எல்லாமும் இவ்வுலகத்தில் சிறப்புடன் வாழும் வழிகளாம். *****வெற்றி வேற்கை முற்றிற்று*****