வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 39 - 48
39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கற்றோரை மன்னர் முதல் மக்கள் வரை எல்லோரும் நேசிப்பார்கள்
40. யானைக்கு இல்லை தானமும் தருமமும்
காட்டின் அரசனாகிய களிறுக்கு தானமளிப்பவர் இந்த இயற்கையைத் தவிர வேறு யாரும் இல்லை.
41. பூனைக்கு இல்லை தவமும் தயையும்
சர்வ பட்சிணியாகிய பூனைக்கு ஒழுக்கமும், கருணையும் இயல்பிலேயே பொருட்டல்ல..
42. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
இகவுலக சுகங்களைத் துறந்த துறவிக்கு இன்பமும் துன்பமும் பொருட்டல்ல.
43. சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்
மரத்தை அண்டிப் பிழைத்து உயிர்வாழும் கரையானுக்கென தனியாக எந்த சொத்தும், செருக்கும் இருக்க முடியாது.
44. முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்
கொடூர வேட்டையாடும் முதலைக்கு நீரின் ஆழமோ, ஓட்டமோ ஒரு பொருட்டல்ல.
45. அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை
மூடருக்கு உலகத்திடம் அச்சமோ, அறிவாரிடம் நாணமோ இருக்காது.
46. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
உணவில்லா வறியவர்க்கு நல்ல நாளும், கிழமையும் தேவையில்லை.
47. கேளுங் கிளையும் கெட்டோர்க்கு இல்லை
மதி கெட்ட மூடருக்கு நட்பும், சுற்றமும் நிலைத்திருக்காது.
48. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா
செல்வமும் ஏழ்மையும் ஓரிடத்தில் நிலைக்காது மாறி மாறித்தான் வரும்.