வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 23 - 30
23. அடினும்ஆ வின்பால் தன்சுவை குன்றாது
சுட்டாலும் பாலின் சுவை கெட்டுப் போகாது.
24. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது
தீயிலிட்டாலும் பசும்பொன் நிறம் குறையாது.
25. அரைக்கினும் சந்தனம் தன்மணம் மாறாது
சந்தனத்தைச் சிதைத்தாலும் தன் மணமிழக்காது.
26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது
கரியில் இட்டாலும் அகிலும் மணம் நாறாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது
ஆழ்கடலைக் கலக்கினாலும் சேறு ஊறாது.
28. அடினும்பால் பெய்துகைப்பு அறாதுபேய்ச் சுரைக்காய்
பசும்பால் இட்டுச் சமைத்தாலும் சுரைக்காய்க் கசப்பு மாறாது.
29. ஊட்டினும் பல்விரை உள்ளிகம ழாதே
நறுமணப் பொருட்கள் சேர்த்தாலும் பூண்டு தன் வாசனையை இழக்காது.
30. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே
தான் செய்த வினைப்படியே பெருமையும் சிறுமையும் சேரும். தத்தம் கருமமே கட்டளைக் கல்.