வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 31 - 38

 31. சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.

தம்மிலும் சிறியார் தெரியாமல் செய்யும் தவறுகளைப் பொறுப்பது சான்றோர் கடமை.

32. சிறியோர் பெரும்பிழை செய்தனர் ஆயின்

பெரியோர் அப்பிழைப் பொறுத்தலும் அரிதே.

ஆனால் சிறியோர் பெரும்பிழை செய்தால் அதை ஆன்றோர் நிச்சயம் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.

எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் ஆனாலும் முட்டாள் முரடர்களின் நட்பு நீருக்குள் பாசி போல நிலையாது விலகும்.

34. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.

மாறாக, மேலோர் நட்பு ஒருநாளே ஆனாலும் பாறையைத் துளைக்கும் வேர் கொண்ட மரம் போல வலிமையாக நிலைக்கும்.

35. கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

இரந்து பிழைத்தாலும் படிக்க வேண்டும். எப்பாடு பட்டாலும் கற்பதை நிறுத்தாதே.

36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்

நெல்லினுள் பிறந்த பதரா கும்மே.

படிக்காதவன் குலப்பெருமை பேசுவது, நெல்லுக்கு நடுவே இருக்கும் புல்லும் நெல்லெனப் பெருமை கொள்வது போல நகைப்புக்குரியது.

37. நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்

கற்றிலன் ஆயின் கீழிருப் பவனே.

எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் கல்லாதவன் கீழ்க்குலத்தவனே.

38. எக்குடி பிறப்பினும் யாவரே யாயினும்

அக்குடியில் கற்றோரை மேல்வரு கென்பர்.

எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும், பண்டிதன் எப்போதும் வரவேற்கப்படுவான். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30