உலக நீதி - உலகநாதர் - பாடல் 1
காப்பு:
உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலை களாய்வரும் கரிமுகன் காப்பு
உலகநீதி என்னும் இந்தப் பாடல் புராணத்தை உரைக்க, வேதத்திற்கும் அரியவனாம் வேழமுகனே துணை.
1. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
படிக்காமல் ஒரு நாளையும் கழிக்காதே
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
யாரையும் பழித்துப் பேசாதே
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
பெற்ற அன்னையை ஒருபொழுதும் மறக்காதே
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
வஞ்சித்து வாழ நினைப்பவரோடு நட்பு கொள்ளாதே
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
பொல்லாச் செயல்கள் நிகழும் இடங்களுக்குப் போகாதே
போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்
முன்னால் சிரித்து, பின்னால் பழிக்கும் பழக்கம் கொள்ளாதே
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
மானையொத்த குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகனை மட்டும் வாழ்த்திப் பாடு என் நெஞ்சே