உலக நீதி - உலகநாதர் - பாடல் 6
6. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
பசப்பு மொழி பேசுபவருடன் பழகித் திரியாதே
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
தன்னோடு உன்னைச் சமமாக எண்ணாதார் இல்லம் புகாதே
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்னோரின் அறிவுரையை மீறி நடக்காதே
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
முன்கோபிகள் நட்பால் பின்விளைவுகளைச் சந்திக்காதே
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
கற்றறிவித்தவரிடம் கடன் வைத்துப் பழகாதே
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
திருடர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாதே
சேர்த்த புகழாளனொரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே
அகிலம் புகழ் வள்ளி மணவாளன், வேலை ஏந்திய திருக்கரத்தானின் பெயரைக் கூறி இரு என் நெஞ்சே.